தமிழீழ விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை இலக்கவைத்து தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளை இங்கு பல முக்கிய கேந்திர நிலையங்களும் வெளிநாட்டு தூதுவராலங்களும் இருப்பதனால் இது வெளிநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி அவர்களின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை முன்னெடுத்தோம் என சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஸ்ர ஆலோசகருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி உள்ளுராட்சிமன்ற மற்றும் மகாணசபை தேர்தல்களை நடத்தி ஜனநாயக ரீதியான மக்கள் பிரதிநிதிகளிடம் கைளித்த பின்னர்தான் நாம் வடக்கு நோக்கிச்செல்வதற்கு இலகுவாக இருந்தது.
வடக்கில் தமிழ் மக்கள் முழுமையாக 22 வருடங்களாக விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி மிகவும் கடினமான துன்பமான வாழ்வை வாழ்ந்துவந்துள்ளனர். இதனால் அவர்கள் தமது வாழ்வையே கிட்டத்தட்ட தொலைத்த நிலையிலேயே உள்ளனர்.
எனவே இவர்களை தற்போது மீட்டெடுத்துள்ள நாம் அவர்களை விரைவில் சக பிரஜைகள்போல வாழவைக்கவேண்டும். அதற்கான சகல நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடும்.
முன்பு காலி, கொழும்பு, மாத்தறை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை பெற்றோர் தயக்கம் காட்டினர். இவற்றை எல்லாம் நாட்டு மக்களின் ஒத்துளைப்புடன் சரியாக முறியடித்துள்ளோம். பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்கு நாம் அதிகம் சிந்தித்தோம், செயற்பட்டோம், பல விலைகளைக்கொடுத்தோம். அதேபோல எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தியிலும் கவனம் செயலுத்துவோம் என்றார்.
No comments:
Post a Comment