இலங்கையில் தமிழர்கள் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை தடுக்காததும், இந்த விவகாரம் தொடர்பாக மெளனம் சாதிப்பதும் அதிர்ச்சியளிக்கின்றது என்று இந்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்
இலங்கையில் குழந்தைகள், குடிமக்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா. இன்னமும் செயல்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் குற்றுயிரும், குறையுயிருமாக வாழ்வுக்குப் போராடும் நிலையில் தவிக்கின்றனர்.
நாங்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்துள்ளோம்.
இலங்கையில் வவுனியா பகுதியில் நடந்த உள்நாட்டுப் போரில், காயமுற்றுத் தவித்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக டாக்டர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை இவர்கள் விடுவிக்கப்படவில்லை.
மனிதநேய அடிப்படையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பது டாக்டர்களின் கடமை. தங்களது கடமையை பரிவுடன் செய்த ஒரே காரணத்துக்காக இவர்களைக் கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும்.
இவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசை, சர்வதேச சமுதாயம் நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment