ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் குறித்து ஆராய்வதை, பாதுகாப்பு சபையின் சில நாடுகள் நிராகரித்து வருகின்றமையை கண்டு பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் மாத்திரம் இராணுவத்தின் தாக்குதலில் 400 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த விடயம் குறித்து ஆராயத் தவிர்ப்பது, அதிருப்தியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் ஸ்பின்டெலிஜனும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், 15 அங்கத்து நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் அதிர்ச்சியை விட அதிகமாக ஏமாற்றம் அடைந்துள்ளோம், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாதுகாப்பு சபையின் தனிப்பட்ட வழிகளுக்கு எங்களால் ஒத்துழைக்க முடியாது என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் குச்னர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எந்த நாடு இலங்கை பிரச்சினை குறித்து பாதுகாப்பு சபையில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மெலிபன்ட்டிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ' நாங்கள் எங்களை பற்றி மட்டும் தான் பேச முடியும், மற்றவர்களே அவர்கள் குறித்து பேச வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இலங்கை பிரச்சினை குறித்து பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து பேச தவிர்ப்பது பிழையானது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்த பிரச்சினை இங்கு கலந்துரையாடப்பட வேண்டியதே என நாங்கள் நம்புகிறோம்" என டேவிட் மிலிபண்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமது இலங்கை விஜயத்தின் போது, அங்கு கண்ணுற்றவற்றை பாதுகாப்பு சபையில் வெளிப்படுத்த தயாராகவே இருப்பதாகவும், எனினும் அதற்கு அவர்கள் அனுமதியளிக்க மறுக்கின்றனர் எனவும் அமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment