யாருக்கும் அடிபணியாத நிலை வேண்டுமாயின் பலமான இராணுவம் நாட்டுக்குத் தேவை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும் வலுவான இராணுவப் படையொன்றின் தேவை இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் இராணுவ ரீதியாகவும்;, பொருளாதார ரீதியாகவும் நாட்டிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத அமைப்பொன்றை பூண்டோடு அழித்ததாக வரலாறு இல்லை அவ்வாறான ஓர் வரலாற்று சாதனையை இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளை பாதுகாக்க சில மேற்குலக நாடுகள் வலிந்து முனைப்புக்களை மேற்கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வடக்கை பாதுகாக்கும் நோக்கில் ஐந்தாண்டு விசேட பாதுகாப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக லக்பிம சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது இரண்டு இலட்சமாக காணப்படும் படைத்தரப்பின் எண்ணிக்கையை ஐந்து இலட்சமாக அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் புதிய முகாம்களை அமைத்தல், இரணைமடு மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களில் விமான ஓடுபாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பல பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
No comments:
Post a Comment