தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை கடத்திய விவகாரம் தொடர்பில் கடற்படை பேச்சாளருக்கும், இராணுவப் படைத் தளபதிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சியில் யுத்த வெற்றி தொடர்பில் செவ்விகளை அளித்த இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வரையிலும் விடுதலைப் புலிகள் கடல் மார்க்கமாக ஆயுதங்களை கடத்தியிருந்ததாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தேசிய தொலைக்காட்சியில் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
எனினும், கடல் மார்க்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்தவில்லை என கடற்படைப் பேச்சாளர் மகேஸ் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை தனது கடமையை நூற்றுக்கு நூறு வீதம் மிகவும் திறமையாக மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே முக்கிய விடுதலைப் புலித் தலைவர்களை மோதல் தவிர்ப்பு வலயத்தில் கொல்ல முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கடற்படையினர் கடமை தவறியதாக எவராலும் குற்றம் சுமத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் கடல் மார்க்கமாக வெளியேறிச் செல்ல முடியாத வகையில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் கடல் மார்க்கமாக யாரோ தப்பிச்சென்றதை, பொறுக்க முடியாமல் தற்போது இக் கருத்து மோதல் வெடித்திருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment