போர்ப் பகுதியான வன்னியில் பணி புரிந்துவிட்டு வவுனியா வந்தபோது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றது.
உலகம் முழுவதில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை இது தொடர்பான அவசர மனுக்களை சிறிலங்கா அரசுக்கும், தமது நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது.
போர்ப் பகுதிகளில் மே 15 ஆம் நாள் வரையில் பணிபுரிந்த மருத்துவர்களான தங்கமுத்து சத்தியமூர்த்தி, துரைராஜா வரதராஜா, வி.சத்தியமூர்த்தி ஆகியோர் சுமார் 5 ஆயிரம் பொதுமக்களுடன் வெளியேறி வவுனியாவை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஓமந்தை சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டு தனியாகக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அனைத்துலக மன்னிப்புச் சபைக்குக் கிடைத்த தகவல்களின்படி மருத்துவர்களான சண்முகராஜாவும் சத்தியமூர்த்தியும் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது. இருந்தபோதிலும் இத்தகவலை உறுதிப்படுத்தமுடியவில்லை.
இவர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு எதுவும் இவர்களுடைய உறவினர்களுக்குக் கொடுக்கப்படவும் இல்லை, இவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் அவரது சட்டத்தரணிகள் எவரும் அவர்களுடன் தொடர்புகொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.
இதேவேளையில் படுகாயமடைந்த நிலையில் ஓமந்தையை வந்தடைந்த மருத்துவர் வரதராஜா அவசர சிகிச்சைக்காக என வான்படை உலங்குவானூர்தி ஒன்றில் ஓமந்தையில் இருந்து கொண்டுசெல்லப்பட்டார். இவர் சிறிலங்கா வான் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
போர்ப் பகுதிகளில் இடம்பெற்ற மக்களுடைய மரணங்கள் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் ஐ.நா., மனித உரிமைகள் அமைப்புக்கள் போன்றவற்றுக்கு கொடுத்தமையால் அரசாங்கம் இவர்கள் மீது கடும் சீற்றமடைந்திருந்தது. இதற்காக இவர்கள் தடுப்புக்காவலில் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தை அனைத்துலக மன்னிப்புச் சபை இப்போது வெளியிட்டிருக்கின்றது.
No comments:
Post a Comment