சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரன், அரசியல் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நேற்று வியாழக்கிழமை தொலைபேசி மூலமாகத் தெடர்பு கொண்ட ஹிலறி, தமிழர்களையும் உள்ளடக்கியதாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்தியதாக அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கேலி தெரிவித்தார்.
மகிந்தவுடன் தான் நடத்திய பேச்சுக்களின் போது இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்காக அனைத்துலக உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்த ஹிலறி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற வேண்டிய ஒரு தேவையையும், இணக்கப்பாட்டின் அவசியத்தையும் வலியுறுத்தியதாக கூறினார்.
இதேவேளையில் கொழும்புக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இந்திய தூதுக் குழுவினருடன் மேற்கொண்ட பேச்சுக்களின் போது, இடம்பெயர்ந்த மக்களை ஆறு மாத காலத்துக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதாக ஒப்புக்கொண்ட உறுதியளித்த அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, 13 ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் இன நெருக்கடிக்கு நீண்ட காலத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment