
தமிழ் மக்களினால் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய சுதந்திரப் போராட்டத்திற்கு அனைவரும் அதரவளிக்க வேண்டுமென சர்வதேச மக்கள் போராட்ட லீக்கின் தலைவர் பேராசிரியர் ஜோஸ் மாரியா சிசோன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்த ராஜபச அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை மற்றும் மனிதாபிமானப் பேரவலம் அண்மைய வாரங்களில் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிப் போராட்டத்தில் பெருந்தொகை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படையினரால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் காஸா நிலப்பரப்பில் இடம்பெற்ற பேரழிவு ஆகியவற்றுக்கு நிகரானதோர் மனிதப் பேரவலம் இலங்கையில் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களை வெளியிடாதிருக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இறுதியில் இந்தத் தகவல்கள் வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்திற்குள் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் பிரவேசிப்பதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென உலகமெங்கிலும் பரவி வாழும் புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
சிறிலங்கா அரசாங்கம் இரசாயன ஆயுதங்கள், நச்சு வாயு, கொத்தணிக் குண்டுகள் மற்றும் வேறும் வகையிலான குண்டுகளைக் கொண்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஆயுத பாவனை ஜெனீவா பிரகடனத்திற்கு முற்றிலும் புறம்பானதென ஜோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்சவின் இராணுவம் மோதல் தவிர்ப்பு வலயத்தில் பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய சுதந்திரப் போராட்டத்திற்கு சர்வதேச மக்கள் போராட்ட லீக் பூரண ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு அனைத்து சர்வதேச சக்திகளும் ஆதரவளிக்க வேண்டுமென அமைப்பின் தலைவர் ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்சைத் தாயகமாக் கொண்டவரும் பிரபல எழுத்தாளரும் கொம்யூனிஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பேராசிரியர் ஜோஸ் மாரியா சிசோனை, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவரான பதிவு செய்து வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment