வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை பூர்த்தி செய்ய சட்ட ரீதியான தீர்வு அவசியம் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மீள அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
அவர்களுக்கு உணவு கொடுத்து முகாம்களில் தங்க வைப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது.
குறிப்பாக வடக்கில் அகதிகள் முகாம்களை அதிகரித்துக்கொண்டு செல்வதைவிட இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு அவர்களை சொந்த இடங்களில் மீள குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஐந்து அல்லது பத்து ஏக்கர் நிலப்பரப்பிற்குள் இரண்டு இலட்சம் மக்களை தங்க வைத்திருப்பதன் மூலம் தீர்வு ஏற்பட்டுவிடாது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க சட்ட ரீதியாக தீர்வை ஏற்படுத்தும் செயற்திட்டம் அவசியமானதாக இருக்கிறது. இல்லையெனில் வீணாக சர்வதேச தலையீடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினை தேசிய பிரச்சினையாக கருத்திற் கொள்ளப்பட்டு, அதற்கு சட்ட ரீதியான தீர்வை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment