Monday, May 4, 2009

முல்லைக் கடலில் அதிகாலை கடும் சமர்: கடற்படையின் இரு நீரூந்து விசைப்படகுகள் கடற்புலிகளால் தாக்கியழிப்பு:கடற்படைப் படகைத் தகர்க்க புலிகள் கையாண்ட உபாயம்


http://thaimadynews.blogspot.com/
முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் றொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகள் இன்று (திங்கள்) அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் கட்டளைப் பீடம் தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அரோப் படகுகளில் பெருமளவு இராணுவத்தினர் கடற்பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டு நீரூந்து விசைப்படகுகளும் கரையை நோக்கி தொடர்ச்சியாகவும் செறிவாகவும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தன.

இந்நிலையில் கடற்புலிகள் இதற்கு எதிரான தாக்குதலைத் தொடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடும் சமர் இரு தரப்பினருக்கும் இடையில் வெடித்தது.

கடற்படையினரின் நீரூந்து விசைப்படகுகளில் 107 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றைப் பயன்படுத்தியே முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி கடற்படையினர் சரமாரியான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர்.

இதற்கு எதிராக கடற்புலிகள் இன்று அதிகாலை திடீர்த் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் இரண்டு கடற்படை நீரூந்து விசைப்படகுகளும் தாக்கி அழிக்கப்பட்டு அந்த இடத்திலேயே மூழ்கியது. இதனால் இன்று காலை மேற்கொண்ட தரையிறக்க முயற்சியை கடற்படையினர் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.

கடற்படையினரின் இரண்டு விசைப்படகுகளிலும் இருந்த கடற்படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவோ கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை தொடர்பாகவே உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை தொடக்கம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதற்கான கடுமையான முயற்சிகளை கடற்படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடற் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் அவை முறியடிக்கப்பட்டுவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையும் இப்பகுதியில் கடற்படையினரின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 12 கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மேலும் இரண்டு கடற்படைப் படகுகள் இன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது சிறிலங்கா கடற்படையினருக்குப் பெரும் பின்னடைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கடற்படைப் படகைத் தகர்க்க புலிகள் கையாண்ட உபாயம்.
தரையில் களநிலைமைகள் இவ்வாறிருக்க கடற்பகுதியில் தமது பலத்தை வெளிப்படுத்த முனைந்த கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடந்த வாரத்தில் முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் கடுமையான சமர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சமர்களில் பெரும்பாலானவை நேருக்கு நேரான மோதல்களாக இருந்துள்ளன.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்ளும் இலக்குடன் கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே கடற்சமர்கள் பெருமளவுக்கு இடம்பெற்றுள்ள போதிலும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சமர் ஒன்று சிறிலங்கா கடற்படைக்குப் பாரிய பின்னடைவைக் கொடுத்திருப்பதை கடற்படை வட்டாரங்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சமரில் கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இந்த சிறப்பு கடற்படைப் பிரிவின் இரண்டாவது கட்டளைத் தளபதியும் ஒருவர் என்பது சிறிலங்கா கடற்படைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளால் வைக்கப்பட்டிருந்த 'பொறி' ஒன்றுக்குள் இவர்கள் கவர்ந்து இழுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் கடற்பகுதியில் தொடரும் போரில் கடற்படையின் இந்த சிறப்புப் பிரிவினரே முக்கிய பங்கை வகித்து வந்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் விரைவாகச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றைக் கண்ட இவர்கள் தமது படகில் அதனைக் கைப்பற்றும் நோக்கத்துடன் துரத்திக்கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் அது ஒரு ஆட்களற்ற படகு என்பதை அதனை அண்மித்த பி்ன்னரே அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்தது.

கடற்புலிகள் தம்மை ஏமாற்றி ஒரு பொறிக்குள் விழ வைத்துவிட்டார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது தொலைக்கட்டுப்பாட்டில் இயங்கும் அந்தப் படகு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

அருகே சென்றிருந்த கடற்படைப் படகும் சிதறியது. அதில் இருந்த கடற்படை சிறப்புப் பிரிவின் இரண்டாவது கட்டளைத்தளபதியும் 11 கடற்படையினரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

லெப்டினன்ட் கொமாண்டர் நிலையில் முன்னர் இருந்த குறிப்பிட்ட கடற்படை அதிகாரி மரணமடைந்த பின்னர் கொமாண்டராக உயர்த்தப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.