தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை களைவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்காவின் சமாதான முன்னெடுப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம், சுயாதீன மதிப்பீட்டுக் குழுவை போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்புவதே தமக்கு முன்னுள்ள தற்போதைய பணியாகும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.05.09) நான் பல தடவைகள் தொடர்பில் இருந்தேன். அனைத்துலக சமூகத்திடம் அவர்கள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதற்கு தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
போர் இடம்பெறும் பகுதியில் உள்ள காயமடைந்தவர்களை அகற்றுவதற்காக அங்கு சுயாதீன மதிப்பீட்டுக் குழுவை அனுப்புவதே எமக்கு முன்னுள்ள பிரதான பணியாகவுள்ளது. அங்கே பலர் காயமடைந்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் நிலை தொடர்பாக என்னிடம் புதிய தகவல்கள் ஏதும் இல்லை. புலிகளின் ஏனைய தலைவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment