தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில், பாராளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சென்று தனிநாட்டு கோரிக்கைக்கான பிரச்சாரங்களில் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிங்கத்திற்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குமாறு அந்தக் கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறில் விடுத்த வேண்டுகோளை அடுத்து தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறைமைக்கு எதிராக செயற்பட்டுவரும் ஓர் பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுமுறை வழங்குவது பொருத்தமானதாக அமையுமா என அவர் அவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நியாயமான உரிமைகளை நசுக்கவில்லை எனவும், எனினும் இவ்வாறான வரப்பிரசாதங்களை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இம்முறை மூன்றுமாத கால விடுமுறையை அனுமதிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அவரது செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்னத்திற்கும் விடுமுறை வழங்க பாராளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment