ஒரு பெரும் இன அழிப்பை நடாத்திக்கொண்டு அதனை வெற்றி கண்டுவிட்டோம் என்று இலங்கை அரசாங்கமும் சிங்கள சமூகமும் வெற்றி கொண்டாடி வருகிறது. அந்த கொண்டாட்டத்தின் எதிர்பாக கிழக்கு மாகாண தமிழ் உணர்வாளர்கள் இன்று மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
அவர்களின் அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை திருநாட்டை ஒரே சிங்கள கொடியின் கீழ் கொண்டுவருவதற்கு 30 க்கு மேற்பட்ட ஆண்டு காலமாக புலித்தழிழனோடு போராடி வெற்றியின் கனவில் மகிழ்கின்ற அதி மேதகு ஐனாதிபதி ராஜபக்ச அவர்களுக்கு தமிழ் வணக்கம்!
உங்கள் கொடுங்கோல் ஆட்சியில் எம் தழிழ் இனத்தை அழித்தொழித்து பெரும் சாதனை படைத்த இறுமாப்புடன் மாண்புமிகு மனிதனாக போற்றப்படுகின்றீர்கள்.
சிங்கள இனத்திற்கு தங்களுடைய வெளிநாட்டு (ஜோர்தான்) பயணத்தினை முடித்துவிட்டு 17.05.2009 அன்று தாங்கள் நாடு திரும்பியபோது இலங்கை மண்ணை தொட்டு வணங்கியதுடன் 19,05.2009 பாராளுமன்றத்தில் தமிழ் இனத்தை வதைத்து அழித்துக்கொண்டும் எங்கள் இனிய தமிழ் மொழியையும் கொச்சைப்படுத்தி உரையாற்றியதும், இராணுவ முகாம்களில் வெடிகொழுத்தி மகிழ்ந்து சிங்கக் கொடிகளை ஏற்றியதும் உங்களுக்கும், உங்கள் இனத்திற்கும் குதுகலமாக இருக்கலாம்.
இச் செயற்பாடுகளை செய்த உங்களது திறமை சிங்கள மக்களின் மனதை கவர்ந்ததுடன் இனத்துவேசத்தையும் தூண்டியுள்ளீர்கள். இந்த செயற்பாடு தமிழர்கள்…. தமிழர்கள்தான் தமிழ்தேசமும் சிங்களமும் சிங்கள தேசமும் வேறு என்று பிரிவினை காட்டிவிட்டீர்கள்.
தமிழ் மக்கள் படும் துயரம் சிங்கள மக்கள் அனுபவித்திருந்தால் உங்களால் இதனை செய்யமுடியுமா?
தமிழ் மக்களோ தங்களது வாழ்விடம், வதிவிடம், உறவுகள், உயிர்கள், உடமைகள் ,உரிமைகள், அனைத்தையும் உங்கள் ஆட்சிப்பலத்தினால் அழித்தொழித்துவிட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றீர்கள். ஒரு நாட்டின் ஜனாதிபதி தனது தேச மக்களை பிரிவினை காட்டி அழித்தொழிப்பதுதான் தங்களுடைய மனிதாபிமான மீட்பாகுமா?
வரலாற்றில் அயல்நாட்டை போராடி ஆக்கிரமித்த அரசர்கள் கூட இவ்வாறு குதூகலம் கொண்டாடவில்லை.
இந்த குதூகலத் தாண்டவம் நிலைத்திருக்கமாட்டாது. வெகுவிரைவில் எமது தமிழினம் துளிர் விட்டு விட்டு விடிவு பெறும். கொல்லாதே கொல்லாதே….ஒரு போதும் வெல்லமாட்டாய் தமிழினத்தை..
புலியை அழித்துவிட்டோம். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என்ற வெற்றிக்களிப்பில் மமதை கொண்டாடுகின்ற உங்கள் ஆட்சியில் பயங்கரவாதம் என்ற போர்வையில் குழந்தைகள் உட்பட வயோதிபர்கள் வரை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தாயே..
நாங்கள் இழந்த இழப்பிற்கு உங்களின் வெற்றி ஈடாகுமா? இதன் பெறுமதியை உங்களால் மீட்க முடியமா? ஆனால் ஒன்று மட்டும் உறுதி..
உங்கள் வெற்றிக்கு எம்மினத்தின் உயிர் பலிதான் விலையென்றால் உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழினத்தை புலிகளாக்கி விட்டது. புலிகள் வேறு தமிழினம் வேறு அல்ல என்பதனை சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தியுள்ளார்கள் எம் தமிழ் மக்கள்.
இவர்களை எப்படி சிங்கள அரசால் வெற்றி கொள்ள முடியும். எங்கள் தமிழ் தேசத்தில் எங்கள் தேசியக்கொடியான புலிக்கொடி பறப்பதற்கு எத்தனை உயிர்களை காவு கொண்டாய் ஆனால் உலகம் எங்கும் புலிக்கொடி பறக்கின்றதே..
உன்னால் எம் தமிழ் இனத்தை அழிக்கமுடியுமா? கொல்லாதே ராஐபக்ஸ அரசே வெல்லமாட்டாய். ஒரு போதும் எம் தமிழ் இனத்தை.
தமிழ் உணர்வாளர்,
கிழக்கு மாகாணம்
No comments:
Post a Comment