வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது பொறுப்பை தட்டிக்கழித்து செயற்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
அத்துடன் கூட்டமைப்பினர் எந்தவித விழுமியங்களுமின்றி நடந்து கொள்வதுடன் சர்வதேசத்திற்குப் பொய்களைக் கூறி விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய தமிழ் கட்சி பிரதிநிதிகளின் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகள் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது தொடர்பில் எத்ததைகய பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை ஆனால் பொதுமக்கள் தொடர்பாகவே அவர்களுக்கு பிரச்சினையுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஆனால் தாங்கள் பொதுமக்களை சிறப்பான முறையிலே பராமரிப்பதாகவும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொது செயலாளரும் திருப்தி வெளியிட்டுள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த வேளையிலே தமது பொறுப்பை தட்டிக்கழித்து செயற்பட்டு வருவதுடன் எந்தவித விழுமியங்களுமின்றி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், இவர்கள் சர்வதேசத்திற்கு பொய்களை கூறிக்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொட்பிலே தாம் கவலை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் நாட்டுடன் தமக்கு எவ்வித கொடுக்கல் வாங்களும் கிடையாது எனவும் இந்திய மத்திய அரசுடனேயே உள்ளது எனவும், தமிழ் நாட்டு விடயத்தை இந்திய மத்தியரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment