நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வரும் அரச தலைவரை வானூர்தி நிலையத்தில் வரவேற்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பு வந்த உடனடியாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனையை நடத்தவிருக்கும் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை நாட்டுமக்களுக்குத் தெரிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் சிறப்பு உரை ஒன்றை அரச தலைவர் நிகழ்த்துவார் எனவும் அச்சந்தர்பத்தில் பாரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் தென்பகுதியில் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியினரும் இனவாதக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதற்கான ஏற்பாடுகளை விரிவான முறையில் செய்திருக்கின்றார்கள். முள்ளியவளைப் பகுதியை மூன்று பகுதிகளில் சுற்றிவளைத்திருந்த படையினர், கடுமையான சமரைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கடற்பகுதியை இன்று முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதையடுத்து முள்ளியவளை மீதான படையினரின் முற்றுகை மேலும் இறுகியிருக்கின்றது. இந்நிலையில் மக்கள் செறிவாக உள்ள பகுதிகள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு உள்ளே செல்வதற்காக முயற்சிகளை படையினர் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 20 ஆயிரம் பேர் கடந்த இரண்டு நாட்களில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால் படை நடவடிக்கை இன்று இரவு தீவிரப்படுத்தப்படலாம் எனத் தெரிகின்றது.
|
No comments:
Post a Comment