ஈழத்தமிழர்களை காப்பாற்றக்கோரி, தமிழ்நாடு முழுவதும் வருகிற 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூரில் நேற்று நடைபெற்றது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
இலங்கையில் கடந்த 5 மாதங்களில் ராணுவ தாக்குதலில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வழியின்றி தினமும் பலியாகி வருகிறார்கள். சொந்த நாட்டு மக்களையே இந்த அளவிற்கு கொன்று குவித்த கொடுமை இலங்கையில் தவிர வேறு எங்கேயும் நடந்தது இல்லை.
எனவே ஐ.நா. தனது படைகளை அனுப்பி, ராஜபக்சே அரசை நீக்கிவிட்டு தமிழர்களை பாதுகாக்க கோரியும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை மீட்டு தர கோரியும் புதிய தமிழகம் சார்பில், ஜுன் 1-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலின்போது, லட்சக்கணக்கான மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும், பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தவர்கள், ரேசன் கார்டு போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்க முடியாமல் செய்ததும், தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்தே செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக புதிய தமிழகம் கட்சி கருதுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யவும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
No comments:
Post a Comment