பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள சிறிலங்கா, இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவதற்குக் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஊடகவியலாளர்களிடம் இந்தத் தகவல்களை நேற்று வியாழக்கிழமை தெரிவித்த சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, அல் குவைதா அமைப்பின் ஆதரவாளர்கள் இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைச் செய்தால் மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நேற்று முன்நாள் கொழும்பு சென்றிருந்த பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கும் தான் இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதாகவும் பாலித கோகன்ன குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"இது தொடர்பாக நாம் சுட்டிக்காட்டியதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட், லண்டனில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மக்களுக்குள்ள ஒரு ஜனநாயக உரிமையாகும். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களின் போது தூதரக கட்டடங்கள் ஏதாவது தாக்குதலுக்குள்ளானால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கடந்த வாரத்தில் 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதையும் மிலிபான்ட் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த நாடுகளில் ஒரு தடைசெய்யப்பட் அமைப்பாக இருக்கின்றது. அந்த நிலையில் அதற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல அல் குவைதா அமைப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டால் மேற்குலக நாடுகள் அதனை சகித்துக்கொள்ளுமா என பிரித்தானிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் இது தொடர்பாக மேற்படி இரு நாடுகளிடமும் தொடர்ந்து நாம் கேள்வி எழுப்புவோம். தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளையும் அவர்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்" எனவும் பாலித கோகன்ன தெரிவித்தார்
No comments:
Post a Comment