Sunday, May 24, 2009

புலிகளின் தலைவர்களின் பாதுகாப்பான சரணடைதலுக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என ஐ.நா.விடம் அரசு தெரிவித்தது: விஜய் நம்பியார்


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்களான பா. நடேசன், புலித்தேவன் ஆகியோர் பாதுகாப்பாக சரணடைவது குறித்து உத்தரவாதம் வழங்க முடியாது என இலங்கை அரசாங்கம் கூறியதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக "தி அவுஸ்திரேலியன்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் சரணடைய விரும்பும் தகவலை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரிவிக்குமாறு பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் மூலமும் பிரிட்டிஷ் இராஜதந்திரியொருவர் மூலமும் தாம் கோரப்பட்டதாக விஜய் நம்பியார் "த வீக்கென்ட் அவுஸ்திரேலியன்' பத்திரிகைக்கு தெரிவித்தார்.

இந்தத் தகவலை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு ஏனைய இராஜதந்திரிகள் ஆலோசனை கூறியதாகவும் அதன்படி இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் இதைத் தெரிவித்ததாகவும். அதற்கு "காலம் கடந்திருக்கலாம். நாங்கள் அதுபற்றி பார்ப்போம்' என பதில் கிடைத்தது என அவர் கூறினார். 

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசனும் சமாதான செயலகத்தின் தலைவரான சீவரட்ணம் புலித்தேவனும் யுத்தத்தின் கடைசித் தினங்களில், தாமும் தமது குடும்பத்தினரும் சரணடைவது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட உதவி நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக தெரியவருகிறது. 

இதேவேளை அவர்கள் சரணடைய விரும்புவதாக ஐரோப்பாவைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மூலம் தனக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன உறுதிப்படுத்தினார். ஆனால் இது தொடர்பாக நம்பியாருடனோ வேறு இராஜதந்திரிகளுடனோ தாம் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை என வீக்கென்ட் அவுஸ்திரேலியனிடம் அவர் கூறினார்.

குறித்த அரச சார்பற்ற நிறுவனத்திடமிருந்து கிடைத்த தகவலுக்கு வழக்கமான சரணடைதல் நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர்களிடம் கூறுமாறு பதிலளித்தாகவும் அவர் கூறினார். 

இந்தத் தகவலை வேறு எவருக்கும் தான் பரிமாறவில்லை எனவும் அந்த நேரத்தில் சரணடைவது குறித்து தன்னுடன் தொடர்பு கொள்வது பிரயோசனமான வழியாக இருக்காது எனக் கருதுவதாகவும் குறித்த நபர்கள் இருவரும் படையினரால் சுடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் ஆனால் அவர்கள் தமது சகாக்களினாலேயே சுடப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை குறித்த இருவரும் தாம் சரணடைய விரும்பும் தகவலை இலங்கை இராணுவத்துக்கு தெரிவிக்கும்படி தம்மை கோரியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அவ்விருவரும் இறுதியாக ஞாயிறன்று இரவு தொடர்பு கொண்டதாக இராஜதந்திரிகளும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை காலை இந்த சரணடைதல் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்தனர். அவர்கள் சுடப்பட்டதாக அன்றையதினம் அரசாங்கம் அறிவித்தது. 

புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் நிராயுதபாணியாக வெள்ளைக்கொடியேந்தி வந்த தமது உறுப்பினர்களை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தினார். 

மேற்படி இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டதாக பாலித கோஹன தெரிவித்தார். பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டதா என்பது குறித்து அவரால் கூறமுடியவில்லை. பிரபாகரனின் உடலும் தகனம் செய்யப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது. 

இந்த தகனங்கள் சாட்சியங்களை அழிக்கும் என்பதால் இது குறித்த செய்தி மிகுந்த கவலையளிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பேச்சாளர் அன்னா நீஸ்டன் தெரிவித்துள்ளார்.

ஆனால் புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோர் துணை இராணுவக் குழுக்களினால் பாதிப்புக்குட்படும் சாத்தியமே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதான கவலைக்குரிய விடயம் எனவும் அவர் கூறினார். 

இதேவேளை மேற்படி சரணடைதல் விவகாரத்தில் பிரிட்டன் மறைமுகமான விதத்திலேயே தொடர்புபட்டதாக பிரிட்டிஷ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

""தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சார்பில் நாம் பிரத்தியேகமாக இதில் பங்குபற்றவில்லை. பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பது உட்பட இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐ.நா. செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கவேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்'' என மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.